மஞ்சள் காமாலை பாதிப்பு சிறப்பு மருத்துவ முகாம்
குன்னுார்,; குன்னுார் உலிக்கல் பேரூராட்சியில், சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.குன்னுார் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் சுற்றுப்பகுதியில் உள்ள சிலர், தனியார் உடல் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டது. கோவை மதுக்கரை பகுதிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த தகவலின் பேரில், சுகாதார துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.'பாதிப்பு எதுவும் இல்லை,' என, தெரிவித்ததுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலாஸ் பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக மருத்துவமுகாம்கள் நடத்தி வருகின்றனர்.சுகாதாரத் துறையினர் கூறுகையில், 'இங்கு, 6 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து, 4 பேருக்கு மட்டும் பாதிப்பு கண்டறிந்து சிகிச்சை பெறுகின்றனர். பில்லிமலை, சேலாஸ் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் மாதிரி எடுத்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வடிகட்டி, காய்ச்சிய நீரை பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதை யாரும் நம்ப வேண்டாம். அச்சப்பட தேவையில்லை,' என்றனர்.