பலத்த காற்றால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி: ஊட்டியில் இரண்டு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியில் கடந்த ஒருவாரமாக பரவலாக பெய்த மழை நேற்று சற்று ஓய்ந்து இதமான காலநிலை நிலவியது. ஊட்டி புறநகர் பகுதிகளில் காலையில் ஒரு சில இடங்களில் காற்றுடன் சாரல் மழை பெய்தது. அதில், தீட்டுக்கல்- மேல் கவ்வட்டி செல்லும் சாலையில் பெரிய மரம் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று 'பவர்ஷா' உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. மாலையில் ஊட்டி தேனிலவு படகு இல்லம் பகுதியில் மரம் விழுந்தது. அலுவலகம், படகுகள் நிறுத்தும் இடம் சேதமடைந்தது. உடனடியாக படகு இல்லம் மூடப்பட்டு, அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மழை ஓய்ந்தாலும் மாலை நேரங்களில் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.