தமிழக எல்லையில் இ-பாஸ் பணியாளர்கள் திடீர் நீக்கம்; நிலுவை சம்பளம் வழங்காததால் ஏமாற்றம்
பந்தலுார் ; தமிழக எல்லை சோதனை சாவடிகளில், இ--பாஸ் சோதனை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு, சம்பளம் வழங்காமல் அவர்களை பணியிலிருந்து நிறுத்தியதால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது.நீலகிரிக்குள் வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் விபரங்களை சேகரித்து பதிவு செய்ய கடந்த மே மாதம், 7-ம் தேதி முதல், இ--பாஸ் நடை முறைப்படுத்தப்பட்டது. அதில், வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் வரும், சுற்றுலா பயணிகள் 'ஆன்லைன்' வாயிலாக' பெயர் விவரங்கள் பதிவு செய்து, அனுமதி கிடைத்த பின்னரே வரவேண்டும். இதுகுறித்து ஆய்வு செய்ய, மகளிர் திட்டத்தின் கீழ், பந்தலுார் அருகே பாட்டவயல், நம்பியார் குன்னு, மதுவந்தால், பூலக்குண்டு, சோலாடி, தாளூர், மணல்வயல், கோட்டூர், கக்குண்டி ஆகிய சோதனைச் சாவடிகளில், 75 பெண்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாத சம்பளமாக, 5-,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக இவர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த, 1-ம் தேதி முதல் இவர்கள் அனைவருக்கும் பணி நிறுத்தப்பட்டது. இவர்களுக்கு பதிலாக தற்போது, 27 பேர் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பணியில் இருந்து நிறுத்தப்பட்டவர்கள், நிலுவையில் உள்ள சம்பளம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் ஏதும் கூறவில்லை.மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன் கூறுகையில்,''இந்த பணி மகளிர் குழுவில் உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இதில், சிலர் சரியாக வேலைக்கு வருவதில்லை. அதனால், தற்போது புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட மகளிருக்கு இரண்டு மாத சம்பளம் விரைவில் வழங்கப்படும்,'' என்றார்.