சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ஊட்டி: கோத்தகிரியை சேர்ந்த தம்பதியின், 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி முதுகுவலியால் அவதிப்பட்டார். பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது, சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்த தகவலால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் குன்னுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரணையில், 'சிறுமியின் வீடு அருகே வசித்து வந்த பிரவீன்,35, என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்தார்,' என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த, 2022ம் ஆண்டு ஆக., 1ம் தேதி பிரவீனை கைது செய்தனர். இவ்வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரவீன் மீது குற்றச்சாட்டு நிரூபணமானதால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 'இழப்பீடு தொகையை வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.