ஊட்டியில் புலி தாக்கி வாலிபர் உயிரிழப்பு
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி, கவர்னர் சோலை அருகே கல்லக்கொரை தோடர் மந்து பகுதி மாசத் மகன் கேந்தர் குட்டன், 38. எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற எருமைகள் திரும்பி வரவில்லை. எருமைகளை தேடி அழைத்து வரவும், விறகு சேகரிக்கவும் கேந்தர் குட்டன் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இரவு அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடினர். நேற்று காலை கேந்தர் குட்டனின் உடல் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரை புலி அடித்துக் கொன்று, பாதி உடலை உட்கொண்டு சென்றது தெரிந்தது. வனத்துறையினர் ஆய்வு செய்தனர். உடலை எடுக்க விடாமல், புலியை பிடிக்க கூண்டு வைக்கக் கோரி கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.