கடையடைப்பு போராட்டத்துக்கு டிரான்ஸ்போர்ட் சங்கம் ஆதரவு; 1.5 லட்சம் கிலோ தேயிலை துாள் தேக்கம்
குன்னுார்; நீலகிரியில் கடையடைப்பு நடந்த போது லாரிகள் ஓடாததால், 1.5 லட்சம் கிலோ தேயிலை துாள் தேக்கம் அடைந்தது.நீலகிரி மாவட்டத்தில், இ--பாஸ் ரத்து செய்வது உட்பட, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்று நடந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து லாரிகளும் ஓடவில்லை.இதனால், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்பட்ட தேயிலை துாள் நேற்று லாரிகளில் கொண்டு செல்லப்படவில்லை. குன்னுார் டிரான்ஸ்போர்ட் சங்க செயலாளர் சேகர் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் சீசன் காலங்களில், ஒரு வழிபாதை மாற்றம் வருவதால், கோத்தகிரி வழியாகவும், காட்டேரியில் இருந்து ஊட்டிக்கும் வாகனங்கள் திருப்பி விடும் போது, குன்னுார் தனி தீவு போன்று ஆகிவிடுகிறது. குன்னுார் பொருளாதாரமும் பாதிக்கிறது. தேயிலை உட்பட அத்தியாவசிய காய்கறி மூட்டைகள் ஏற்றி செல்லும் லாரிகள் கூடுதல் செலவு செய்வதுடன், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே, லாரி டிரான்ஸ்போர்ட் உட்பட அனைத்து லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இந்த முழு கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். தினமும், 15க்கும் மேற்பட்ட லாரிகளில் தேயிலை துாள் மூட்டைகள் கொண்டு செல்லும் நிலையில், இன்று (நேற்று) மட்டும் 1.5 லட்சம் கிலோ தேயிலை துாள் கொண்டு செல்லப்படவில்லை,'' என்றார்.