எல்லையில் விழுந்த மரம்; மூன்று மாநில சாலையில் பாதிப்பு
கூடலுார்; தமிழக- கேரளா எல்லையில் மரம் விழுந்து, மூன்று மாநில சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலுார் மற்றும் அதன் ஒட்டிய கேரள எல்லை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையுடன், அவ்வப்போது வீசும் பலத்த காற்றில், சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்து வருகிறது. விழுந்த மரங்களை மீட்பு குழுவினர் அகற்றி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.இந்நிலையில், கூடலுார் கீழ்நாடுகாணி அருகே, தமிழக- கேரளா ஒட்டிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை, இரண்டு மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்வழியாக, நீலகிரி, கேரளா, கர்நாடகா இடையே செல்லும் வாகனங்கள், சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.தொடர்ந்து, கேரளா வனத்துறையினர், போலீசார் அங்கு வந்து மரங்களை அகற்றி, இரவு,8:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், தமிழகம்- -கேரளா - கர்நாடகா இடையே, 3 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.