மலை மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள்; மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குன்னுார்; 'ஊட்டியில் நல திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் மாநில முதல்வர், நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னுாரில், லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன்; மக்கள் சேவை மைய நிர்வாகிகள் சார்பில், மாநில முதல்வர்; மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில், செயல்படுத்தாத நில உடமை மேம்பாட்டு திட்டத்தை, மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.l அனைத்து உள்ளாட்சிகளிலும் பழங்குடியின மக்கள் மற்றும் பூர்வ குடிமக்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயை கணக்கில் கொண்டு, பேரூராட்சிகளாக உள்ளதை மாற்றி ஊராட்சியாகவும்; ஊராட்சிகளை சிற்றுராட்சியாகவும் மாற்ற வேண்டும்.l மாநிலத்தில், முதலில் பஸ்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, நீலகிரியில், 450 அரசு பஸ்கள் இயங்கிய நிலையில், தற்போது 335 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில், ஐகோர்ட் உத்தரவை மீறி பல பஸ்களில் வசூலிக்கும், 'எக்ஸ்பிரஸ்' கட்டணத்தை ரத்து செய்து, அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்க வேண்டும்.l மாவட்டத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.l மாவட்டத்தில் 110 மினி பஸ்கள் இயங்கும் நிலையில், 25 மினிபஸ் களுக்கு அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், கிராமங்களை இணைக்கும் வகையில் இயக்காமல் உள்ள மினி பஸ்களின் உரிமங்கள் ரத்து செய்ய வேண்டும்.l தமிழகத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் ஒரே விலையில் விற்கப்படும் நிலையில், நீலகிரியில் மட்டும், 'டிலைட்' பால் 5 ரூபாய்; அரை லிட்டர் தயிர், 8 ரூபாய் கூடுதலாகவும், விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.l தென்னகத்தின் நீர் தொட்டியாக உள்ள நீலகிரி மலையில் பசுமை பாலைவனமாக மாற காரணமாக, உள்ள யூகலிப்டஸ், பைன், அக்கேசசியா போன்ற அன்னிய மரங்களை அகற்றும் உத்தரவை முழுமையாக செயல்படுத்தி,இவற்றை கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு எரிபொருளுக்காக வழங்க வேண்டும். l குன்னுாரில் அரசு கல்லுாரி அமைக்கும் முடிவை மாற்றி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில், குந்தா பகுதியில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டும்.l குன்னுார் மவுண்ட் ரோடு, அருவங்காடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் மற்றும் நெடுஞ்சாலை அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.