பஜாரில் நிறுத்தப்படும் வாகனங்கள்; அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
பந்தலுார்; பந்தலுார் பஜார் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். பந்தலுார் பஜார் தாலுகா தலைநகராக உள்ளதுடன், தமிழக--கேரளா இணைப்பு சாலையாகவும் உள்ளது. இதனால், அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில், பந்தலுார் பகுதிக்கு பல்வேறு அலுவலகங்களுக்கு பணிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பஜாரின் ஒதுக்குபுற பகுதிகளில் நிறுத்தி செல்கின்றனர்.ஆனால், கடைகள் மற்றும் வங்கிகளுக்கு வந்து செல்வோர் வாகனங்களை சாலைகளில் நிறுத்தி செல்கின்றனர். பல மணி நேரம் இதுபோல் வாகனங்களை தாறு, மாறாக நிறுத்தி செல்வதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பஜார் பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்வோர் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.