வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழ் நாட்டிலுள்ள அனைவரும் தலா ஒரு ரூபாய் கொடுத்து உதவினாலும் இவர்களை காப்பாற்ற வழி உள்ளது, அதற்கான வசூலில் உரிய மற்றும் நேர்மையானவர்கள் இறங்கினால் போதும்
பந்தலுார்: பந்தலுார் அருகே சேலக்குன்னா பழங்குடியின கிராமத்தில் சேலை மற்றும் பிளாஸ்டிக் குடிசைகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வரும் அவலம் இன்றும் தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்தில் நெல்லியாளம் நகராட்சி பகுதியில் பணியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில், கடந்த உள்ளாட்சி தேர்தலில், தமிழகத்தில் ஒரே பழங்குடியின நகராட்சி தலைவர் பதவி, பழங்குடியின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டு, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவகாமி என்பவர் நெல்லியாளம் நகராட்சி தலைவரானார். இதனால், நகராட்சி பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள், மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. பழங்குடியின சமுதாய நகராட்சி தலைவரால், அவர் சார்ந்த சமுதாய மக்களுக்கு இதுவரை எந்த வளர்ச்சியும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதில், நகராட்சி தலைவர் சிவகாமி போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டுகளில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு கூட முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. உதாரணமாக, இங்குள்ள, 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது சேலக்குன்னா வீச்சிக்கொல்லி என்ற இடத்தில் பணியர் சமுதாயத்தை சார்ந்த, 26 குடும்பங்களின் வாழ்வில் சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. சேலையில் அமைந்த குடிசைகள் இவர்களுக்கு வீடு வசதி இல்லாத நிலையில், பிளாஸ்டிக், உடுத்தும் சேலை, தார்பாலின் கொண்டு மூடப்பட்ட தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். தினசரி குடியிருப்புகள் வழியாக யானைகள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பு இல்லாத சூழநிலை உள்ளது. கிராமத்தில் நகராட்சியின் குடிநீர் கிணறு இருந்தாலும், சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆனதால், இந்த தண்ணீரை குடித்தாலே உடலில் அலர்ஜி ஏற்படுவதால், இந்த தண்ணீரையும் பயன்படுத்த முடியாமல் அவர்கள் சிரமப்படுகின்றனர்.
Galleryகிராமத்தை சேர்ந்த பழங்குடியான புஷ்பா கூறுகையில், ''பல தலைமுறைகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வந்து எங்களின் ஓட்டுக்களை பெறுவதோடு, எங்களை மறந்து விடுகின்றனர். வீடு வசதி, தண்ணீர் கேட்டு உள்ளூர் அதிகாரிகள் முதல், மாவட்ட கலெக்டர் வரை புகார் கொடுத்தும் தீர்வு இல்லை. எங்கள் சமுதாய பெண் நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற போது மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அவர் கூட எங்களுக்கு உதவிட முன்வரவில்லை. தற்போதைய முதல்வர் தான் எங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பான மனுவை முதல்வருக்கு அனுப்ப உள்ளோம்,''என்றார்.
தமிழ் நாட்டிலுள்ள அனைவரும் தலா ஒரு ரூபாய் கொடுத்து உதவினாலும் இவர்களை காப்பாற்ற வழி உள்ளது, அதற்கான வசூலில் உரிய மற்றும் நேர்மையானவர்கள் இறங்கினால் போதும்