நெடுஞ்சாலையோரம் செயற்கை தீ ஏற்படுத்தி தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தீவிரம்
கூடலுார்: முதுமலை, மசினகுடி வனப்பகுதிகளில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மசினகுடி சாலையோரம் செயற்கை தீ ஏற்படுத்தி தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம் பகுதியில் நடப்பு ஆண்டு இதுவரை கோடைமழை பெய்யவில்லை. இதனால், வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. உணவு, குடிநீருக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும், வறட்சியில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தெப்பக்காடு, மசினகுடி சாலை வழியாக பயணிப்பவர்களால் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, சாலையோரம், செயற்கை தீ ஏற்படுத்தி தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். செயற்கை தீ வனப்பகுதிக்குள் பரவாமல் இருக்க, ஊழியர்கள் கண்காணித்து, தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மசினகுடி சாலை வழியாக பயணிக்கும், சுற்றுலா பயணிகளால், வனத் தீ ஏற்படுவதை தடுக்க சாலையோரம், செயற்கை தீ ஏற்படுத்தி தீ தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணித்து வருகிறோம். வனத்தீ ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.