தேயிலை தோட்டங்களில் சில்வர் ஓக் மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்
கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலை தோட்டங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரக்கிளை அகற்றும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில்தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த மரங்கள் வறட்சி நாட்களில், தேயிலை செடிகளுக்கு நிழல் தருவதுடன், அதன் கிளைகள் விறகுக்காக பயன்படுத்தப்படுகிறது. முதிர்ந்த மரங்கள் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு அதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில், முதிர்ந்த மரங்களில் கிளைகள் வெட்டப்படாமல் இருக்கும் பட்சத்தில், இலை சருகுகள் உதிர்ந்து, செடிகள் மேல் பரவுவதால், மகசூல் வெகுவாக குறைகிறது. இதனால், பசுந்தேயிலை மூலம் கிடைக்கும் வருமானம் விவசாயிகளுக்கு தடை படுகிறது. இதனால், மரக்கிளைகளை அகற்றும் பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் நாட்களில், கோடை வெயிலில் நிலத்தில் சூரிய வெளிச்சம் நிலத்தில் பட்டு, ஏப்., மற்றும் மே மாதங்களில் மழை பெய்யும் பட்சத்தில, பசுந்தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்பதால், கிளைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.