பெரம்பலுார்:கரூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் கலைவாணன், 49, இவர், தன் மனைவி மகேஸ்வரி, 45, மகள் ஆர்த்தி, 18, ஆகியோருடன், தன் காரில் அரியலுார் மாவட்டம் ஆண்டிமடத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, நேற்று காலை மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை கலைவாணன் ஓட்டினார்.திருச்சி- - சிதம்பரம் நெடுஞ்சாலையில், நெரிஞ்சிக்கோரை அருகே கார் சென்ற போது, எதிரே சீர்காழி, தென்பாதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் ரமேஷ், 46, என்பவர் ஓட்டி வந்த காரும், கலைவாணன் ஓட்டி சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில், கலைவாணன் பயணம் செய்த கார் சாலையோர பள்ளத்தில் துாக்கி வீசப்பட்டது. பலத்த காயமடைந்த கலைவாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரியலுார் போலீசார் கலைவாணன் உடலையும், படுகாயமடைந்த கலைவாணன் மனைவி மகேஸ்வரி, மகள் ஆர்த்தி, சித்த மருத்துவர் ரமேஷ், அவரது மனைவி, மகள், மகனை மீட்டு அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார். விபத்து குறித்து, அரியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.