கோவில்களை பாதுகாக்க வேண்டும் சுயசேவா அறக்கட்டளை கூட்டத்தில் வலியுறுத்தல்
பெரம்பலுார் : ''கலாசாரம் நன்றாக இருக்க வேண்டுமானால், நாம் கோவில்களை பாதுகாக்க வேண்டும்,'' என, சுய சேவா அறக்கட்டளை 15ம் ஆண்டு பொதுக்குழுழு கூட்டத்தில் நளினி பத்மநாபன் தெரிவித்தார்.சுயசேவா அறக்கட்டளை, 15ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள காந்தி மஹாலில் நடந்தது.கூட்டத்துக்கு தலைமை வகித்து, கனரா வங்கி இயக்குனரும், சுயசேவா அறக்கட்டளை தலைவருமான நளினி பத்மநாபன் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து கைவிடப்பட்ட கோவில்களிலும் தினசரி பூஜையை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் சுயசேவா அறக்கட்டளை. தமிழகத்தில், 1.10 லட்சம் கோவில்கள் உள்ளன. பெரும்பான்மை கோவில்களில் பூஜை நடப்பதில்லை. கோவில்களில் தினசரி பூஜை நடைபெறும் சூழலை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அனைத்து கிராமங்களிலும், உள்ளூர் மக்கள் கோவிலுக்கு வரத்தொடங்க வேண்டும். இது அனைத்து ஹிந்துக்களும் ஒன்றிணைந்து வளர ஒரு பெரிய மையமாக மாறும்.பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க, நம் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். கலாசாரம் நன்றாக இருக்க வேண்டுமானால், நாம் கோவில்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழுப்புரம் ராமகிருஷ்ணா மிஷன் செயலர் ஸ்வாமி பராமசுகானந்தா அருளாசி வழங்கி பேசினார். ஆடிட்டர் பத்மநாபன், சென்னை சூப்பர் ஆட்டோ போர்ஜ் தலைவர் சீதாராமன், கனரா வங்கி முன்னாள் இயக்குனர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுயசேவா அறக்கட்டளை மற்றும் வேப்பந்தட்டை சுபிக் ஷா தொண்டு நிறுவனம் இணைந்து மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 285 பெண்களுக்கு ஒரு கோடியே 61 லட்சத்து 8,000 ரூபாய் மதிப்பிலான கடனுதவியை நளினி பத்மநாபன் வழங்கினார்.