உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகையில் பள்ளி மாணவியருக்கு அகல் விளக்கு திட்டம் துவக்கம்

புதுகையில் பள்ளி மாணவியருக்கு அகல் விளக்கு திட்டம் துவக்கம்

புதுக்கோட்டை:சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவியரை பாதுகாக்கும் வகையில், மாநில அளவிலான, 'அகல் விளக்கு' திட்டத்தை, புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் துவங்கி வைத்தார். தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவியருக்கு, சமூகத்தில் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக, அகல் விளக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என, 2024 ஜூனில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், நேற்று, அகல் விளக்கு திட்டத்தை துவங்கி வைத்தார். அமைச்சர் மகேஷ் கூறியதாவது: பள்ளி மாணவியருக்கு உடல், மனம், சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள், நேரடியாகவும், மொபைல் போன், இணையம் வாயிலாகவும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்னைகளில் மாணவியர் தங்களை மீட்டு, பாதுகாத்து கொள்வதற்காக, அகல் விளக்கு புதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக, ஆசிரியைகள், மாணவியர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினருக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்படும். அந்த கையேட்டில் பிரச்னைகளை தீர்க்கும் முறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகளை, ஆசிரியைகள் கண்டறிந்து, அதற்குரிய தீர்வுகளை காண்பர். முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இந்த திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி