கெட்டு போன ஷவர்மா சாப்பிட்ட 5 பேருக்கு அவசர சிகிச்சை
புதுக்கோட்டை : புதுக்கோட்டையைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், 49, மனைவி ஷர்மிளாபானு, 40, மகன்கள் அப்துல் அஸ்ஸலாம், 15, அப்துல்ரகுமான், 7, மகள் சுமையா ரிஸ்வானா, 13, ஆகிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்.கீழ நான்காம் வீதியில் உள்ள 'ஷவர்மா கார்னர்' என்ற கடையில், ஷவர்மா மற்றும் சிக்கன் ரோல் ஆகியவற்றை நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டனர்.இவர்களுக்கு, நேற்று காலை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தகவல் அறிந்து, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட அந்த கடையில் ஆய்வு நடத்தியதில், கெட்டுப்போன சிக்கன் இருப்பது தெரிந்தது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர்.சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் யூசுப், 33, என்பவரிடம் விசாரணை செய்து, கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். புதுக்கோட்டை, கணேஷ்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பிரவீன்குமார் கூறும்போது, ''பண்டிகை காலங்களில் இனிப்புகள் தயாரிப்பவர்கள் அதிக கலர் சேர்க்கக் கூடாது; ரசாயனம் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன,'' என்றார்.