தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு மேலச்சாக்குளம் முக்கு ரோடு அருகே கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. முதுகுளத்துார்--சாயல்குடி ரோட்டோரத்தில் கீழச்சாக்குளம் கண்மாய் கரை உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கரையில் மணல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது.கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் இல்லாததால் மழையில் மணல் அரிப்பு ஏற்பட்டு ரோடு சேறும், சகதியுமாக மாறி வருகிறது. முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு மேலச்சாக்குளம் முக்கு ரோடு அருகே சேறும் சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கண்மாய் கரையில் ரோட்டோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.