ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி... புதுப்பிப்பு
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பன் புது ரயில்பாலத்தில் இம்மாதம் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளதால், ராமேஸ்வரத்தில் கேட்பாரற்று கிடந்த பக்தர்கள் இலவச தங்கும் விடுதியை கோயில் நிர்வாகம் புதுப்பித்துள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க இலவச விடுதி இல்லாமல், தனியார் விடுதியில் அதிக கட்டணத்தில் தங்கினர். இதில் ஏழை பக்தர்கள் கோயில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் பாதுகாப்பற்ற நிலையில் ஓய்வெடுத்தனர். இதனை தவிர்க்க 2017ல் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களுக்கு இலவச தங்கும் விடுதி அமைத்தனர்.ஆனால் இங்கிருந்து கோயிலுக்கு செல்ல அரசு பஸ் போக்குவரத்து இல்லாததாலும், 2022 டிச., முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை ரத்தானதால், விடுதியில் தங்குவதை பக்தர்கள் முற்றிலும் தவிர்த்தனர். இதனால் விடுதி பராமரிப்பு இன்றி முடங்கியது. இந்நிலையில் மார்ச்சில் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளதால், தங்கும் விடுதியை புதுப்பிக்க கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் உத்தரவிட்டார்.அதன்படி கடந்த சில நாள்களாக முள்செடிகள், முள் மரங்களை அகற்றி சுத்தம் செய்து 200க்கும் மேலான தென்னை மரக்கன்றுகள் நட்டனர். மேலும் குளியலறை, கழிப்பறையை சரிசெய்ததால், இலவச தங்கும் விடுதி புதுப்பொலிவுடன் பக்தர்கள் ஓய்வெடுக்க தயார் நிலையில் உள்ளது.