| ADDED : ஜூலை 08, 2024 06:07 AM
பரமக்குடி : -பரமக்குடி ஓட்டப்பாலம் பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.பரமக்குடியில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, இளையான்குடி சந்திப்பு என ஓட்டப்பாலம் பகுதி பிசியாக உள்ளது. இங்கு கடந்த ஆண்டுகளில் குறுகிய ரோடாக இருந்த நிலையில் விபத்துக்க்கள் அதிகம் நடந்தன. மேலும் பஸ் ஸ்டாப்கள் இன்றி பயணிகள் சிரமப்பட்டனர். இது குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்நிலையில் ஓட்டப் பாலம் பகுதியில் உள்ள ரோடுகள் அகலப்படுத்தப்பட்டு ரவுண்டானா அமைத்து வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மூன்று இடங்களில் உள்ள பஸ் ஸ்டாப்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பஸ் ஸ்டாப் அருகில் வேன் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பது, கடைகளை விரிப்பது என தொடர்கிறது. இதனால் அருகில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம், வங்கிகள், கூட்டுறவுத்துறை அலுவலகம், குடியிருப்புகள், கடைகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.ஆகவே பஸ் ஸ்டாப் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.