ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வசதி
திருவாடானை: ஊராட்சிகளில் மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் தகவல் பலகையில் அலுவலர்களின் அலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகை வைத்து அதில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் அலைபேசி எண்கள் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் என மூன்று பேரின் அலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பொது பிரச்னைகளை தெரிவிக்கலாம் என ஊராட்சி செயலர்கள் கூறினர்.