ரேஷன் கடையில் விரல் ரேகை பதிவாகவில்லை: மக்கள் வாக்குவாதம்
திருவாடானை; விரல் ரேகை பதிவு நடைமுறையை மேற்கொள்வதில் சிக்கலால் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது.இதனால் ரேஷன் கடை ஊழியர்களுடன் கார்டுதார்கள் வாக்குவாதம் செய்கின்றனர். ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் போது அவர்களது கைவிரல் ரேகை அல்லது கருவிழி ரேகை பதிவு செய்யப்படுகிறது. சிலருக்கு ரேகை பதிவாகவில்லை. இதனால் பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் ரேஷன்கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகளும், 36 ஆயிரத்து 650 கார்டுதாரர்களும் உள்ளனர். நேற்று தொண்டியில் ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற சிலருக்கு ரேகை பதிவாகவில்லை. இதனால் அவர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.ரேஷன்கடை ஊழியர்கள் கூறியதாவது: ஆதார் பதிவு அடிப்படையிலான தரவுகளுடன் சரி பார்த்து பி.ஓ.எஸ்., கருவி மூலம் விரல் ரேகை பதிவுகள் ஏற்கப்படுகின்றன. நெட்ெவார்க் கிடைக்காமல் ரேகை பதிவு தாமதமாகிறது. கடைக்கு பொருள் வாங்க வரும் பெரும்பாலான முதியோர் கைவிரல் ரேகைகளை பதிவு செய்வதிலும் சிரமம் உள்ளது.விரல் ரேகைகள் 70 சதவீதம் வரை கிடைத்தால் கூட பி.ஓ.எஸ்., கருவி ஏற்றுக் கொண்டு விடும். பொருட்களுக்கு பில் போட்டு விடுவோம். தற்போது இந்த சாப்ட்வேர் அமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விரல் ரேகை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே பில் போட முடியும் என்ற நிலை உள்ளது.கார்டுதாரர்களுக்கு இதைப் புரிய வைத்து ரேகை பதிந்து பொருள் வழங்குவதற்குள் பெரும் சிரமமாக உள்ளது. தாமதம் ஏற்படுவதால் பலரும் எங்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர் என்றனர். திருவாடானை சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், ஆதார் சென்டருக்கு சென்று மீண்டும் ரேகை பதிவு செய்து அப்டேட் செய்தால் ரேகை பதிவாகிவிடும் என்றனர்.
கீழக்கரையில் முதியோர் தவிப்பு
கீழக்கரையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ரேஷன் கடையில் பொருள் வாங்குவதற்கு செல்வதற்கு பதிலாக தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரை கடிதம் மூலமாக வேறொரு நபர் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.ஒரு வாரமாக ரேஷன் கடை எண் 1ல் முதியவர்கள் ரேஷன் பொருள்கள் பெறுவதற்கு நேரில் வந்தால் மட்டுமே பொருட்கள் தரப்படும் எனவும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட கடிதம் குறித்து கேள்வி எழுப்பினாலும் உரிய பதில் அளிப்பதில்லை.சம்பந்தப்பட்டவர்களே நேரடியாக பொருள்கள் வாங்க வேண்டும் எனவும் வாய்மொழி உத்தரவு இடுகின்றனர். முதியோர் நலன் கருதி தாலுகா அலுவலகத்தில் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதம் மூலம் பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.