தாமதமாக வரும் அரசு டாக்டர்கள் காத்திருந்து நோயாளிகள் அவதி
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சில டாக்டர்கள் தாமதமாக வருவதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு அரசு மருத்துவமனை உள்ளது. திருவாடானை, சின்னக்கீரமங்கலம், ஓரிக்கோட்டை, அரசூர், நாகனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.ஐந்து டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். காலை 7:00 மணிக்கு சிகிச்சை துவங்க வேண்டும். ஆனால் சில நாட்களில் டாக்டர்கள் தாமதமாக வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். நேற்று காலை புறநோயாளிகள் 7:00 மணிக்கு வந்தனர். ஆனால் டாக்டர்கள் 9:35 மணிக்கு வந்தனர். நீண்ட நேரம் காத்திருப்பதால் நோயாளிகள் சோர்வடைந்தனர். 12:00 மணி வரைக்கும் சிகிச்சை அளித்துவிட்டு டாக்டர்கள் சென்று விடுவதால் அதன் பிறகு வரும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்ய வருகிறார் என்று கேள்விப்பட்டதும், அன்றைய தினம் சரியான நேரத்திற்கு வந்து மாலை 6:00 மணி வரை டாக்டர்கள், நர்சுகள் காத்திருந்தனர். ஆனால் கலெக்டர் வரவில்லை. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்கள் ஏழை மக்கள். ஆகவே கடமைக்காக பணியாற்றாமல் அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.