| ADDED : ஜூலை 18, 2024 10:49 PM
ராமநாதபுரம்:தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக முகம் பார்க்கும் ஆள் உயர நிலைக்கண்ணாடி அமைக்கப்படுகிறது.இதன்படி ராமநாதபுரம் அருகே கீழச்சோத்துாருணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் திறந்து வைத்தார். அவர் கூறியதாவது: பள்ளி மாணவர்கள்,வளர் இளம் பருவத்தினர் சிறு வயதிலேயே தங்களை செம்மைப்படுத்திக் கொள்ள ஏதுவாகவும், ஆளுமை திறனை அதிகரிக்கவும், உனக்கு நிகர் நீயே எனும் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கத்திலும், 'நான் கம்பீரமாக இருக்கின்றேன்'(I AM SMART) என்ற வாசகங்களுடன் கூடிய ஆள் உயர கண்ணாடி ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அமைக்கப்படுகிறது.ஒப்பந்ததாரர்கள் அளித்த நன்கொடை நிதியிலிருந்து முதற்கட்டமாக மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இது அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளிலும் அமைக்கப்படும் என்றார். முன்னதாக பள்ளியில் அடிப்படை வசதிகள், கல்வித்தரம் குறித்து கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் பங்கேற்றனர்.