பரமக்குடி மாநில நெடுஞ்சாலையோரம் காய்ந்த மரத்தை அகற்றக் கோரிக்கை
பரமக்குடி: பரமக்குடியில் இருந்து தெளிச்சாத்த நல்லுார் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் ஆபத்தான காய்ந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை, பரமக்குடி நான்கு வழி சாலையில் இருந்து தெளிச்சாத்த நல்லுாரை நோக்கி பரமக்குடி நகருக்குள் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இப்பகுதியில் தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிட்கோ உட்பட ஏராளமான மெக்கானிக் கடைகள் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முந்தைய மரம் காய்ந்த நிலையில் நிற்கிறது. தற்போது வீசும் சூறாவளியால் முறிந்து விழும் நிலையில் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் உட்பட அப்பகுதி மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதேபோல் காட்டுப்பரமக்குடி மின் நிலையம் எதிரில் சாயும் நிலையில் ஆபத்தான மரம் இருக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கும் நிலையில் தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வருகிறது. மேலும் மரம் உயரழுத்த மின்கம்பிகள் மீது விழுந்து தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே விபத்திற்கு முன் நெடுஞ்சாலை அதிகாரிகள் மரத்தை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ––