உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சரணாலயங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

சரணாலயங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வனத்துறை சார்பில் சரணாலயங்கள், நீர்நிலைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த ஆண்டுகளை விட இந்த சீசனில் அதிகளவில் வெளிநாட்டுப்பறவையான செண்டு வாத்து வலசை வந்துள்ளது, என கண்டறியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் சித்திரங்குடி, தேர்தங்கல், காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனுார் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது. சக்கரக்கோட்டை, தேர்தங்கல் ஆகிய இடங்கள் ராம்சார் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. காஞ்சிரங்குளம், சித்திரங்குடி ராம்சார் பகுதிகளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சரணாலங்களில் நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று மதியம் வரை பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இந்த கணக்கெடுப்பில் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் முருகன் தலைமையில் சென்னை, மதுரையை சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 70க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.சரணாலயங்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் பறவைகள் அதிகளவு கண்டறியப்பட்டுள்ளது.சிக்கல் பகுதியில் உள்ள கண்மாய்களில் பிளமிங்கோ மற்றும் மல்லல், ஆர்.எஸ்.மங்கலம், உத்தரகோசமங்கை, கண்மாய்களில் அதிகமான வலசை வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் கணக்கிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 75 சதவீத கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் இரண்டு மூன்று முறை பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பறவைகள் கணகெடுப்பில் ஈடுபட்ட பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.நத்தை கொத்தி நாரை, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள், கொக்குகள் உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்தாண்டு கணக்கெடுப்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் காணப்பட்டுள்ளது. வெளிநாட்டு வலசை பறவையான செண்டு வாத்து கடந்த ஆண்டுகளில் 50க்கும் குறைவான எண்ணிக்கையில் தேர்தங்கல் சரணாலயத்திற்கு வந்திருந்த நிலையில் கணக்கெடுப்பில் 2000க்கும் மேற்பட்ட செண்டு வாத்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பறவைகள் வலசை வருவது கால தாமதமாக தொடங்கினாலும் வரத்து அதிகரித்துள்ளதாகவும், கூடுதல் நாட்கள் தங்கி இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி