உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய மின்மோட்டார் வாங்க 50 சதவீதம் அரசு மானியம்

புதிய மின்மோட்டார் வாங்க 50 சதவீதம் அரசு மானியம்

ராமநாதபுரம்: வேளாண் பொறியியல் துறையில் குறைந்த மின்சாரத்தில் அதிக திறனுடன் இயங்கும் மின் மோட்டாரை 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.பழைய பழுதடைந்த மோட்டார்களை தொடர்ந்துபயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாவதுடன், பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகமாகிறது. மின் மாற்றியும் சுமை தாங்காமல் பழுதாகிறது. இந்த சிக்கலை தீர்க்க திறன் குறைந்த மற்றும் பழுதான மின்மோட்டார் களை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும், புதிய கிணறுகளை உருவாக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு அரசு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்குகிறது.இத்திட்டத்தில் 80 புதிய மின்மோட்டார்கள் பொருத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.இதே போல விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை தொலைவில் இருந்து அல்லது தங்கள் வீட்டில் இருந்தபடியே இயக்கும் கருவியும் மானியத்தில் வழங்கப்படுகிறது.விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், நீர் ஆதாரம் இருக்கும் இடத்தின் வரைபடம், ஆதார் கார்டு நகல், மும்முனை இணைப்பு எண் விவரம் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு வேளாண் உதவி செயற்பொறியாளர்களை ராமநாதபுரம் -86102 03117, பரமக்குடி -96553 04160 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !