இலங்கை டு தனுஷ்கோடி 6 பேர் நீந்தி கடந்தனர்
ராமேஸ்வரம் : இலங்கை டு தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலில் 6 பேர் 29 கி.மீ., துாரத்தை நீந்தி கடந்தனர்.மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, கர்நாடகாவைச் சேர்ந்த நீச்சல் வீரர், வீராங்கனைகள் ஆஷா 50, குயின் விக்டோரியா 51, ஸ்டீபன் 33, மோகன் ராவ் 65, ரகுராம் 27, ரிச்சா 19, ஆகியோர் மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்று பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்கள் அதிக நீரோட்டம் உள்ள பாக்ஜலசந்தி கடலில் நீந்தி கடக்க முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து இரு விசைப்படகில் இந்த 6 நீச்சல் வீரர்கள், கண்காணிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் என 23 பேர் இலங்கை தலைமன்னார் சென்றனர்.இதில் நீச்சல் வீரர்கள் 6 பேர் நேற்று காலை 5:40 மணிக்கு தலைமன்னார் கடலில் குதித்து நீந்த துவங்கினர். இவர்கள் நேற்று மதியம் 3:15 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்து சேர்ந்தனர். இவர்களை இந்திய, இலங்கை நீச்சல் வீரர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ரோஜர், உறவினர்கள் வரவேற்றனர்.