அரசுப் பள்ளி முன்புறம் ஆபத்தான மின் கம்பி
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் நுழைவு வாயில் பகுதியை ஒட்டிய இடத்தில் உயரழுத்த மின் கம்பி செல்கிறது. இதன்அருகில் இரண்டு வேப்ப மரக் கிளைகள் உரசியவாறு அடர்ந்து வளர்ந்துள்ளது.பலத்த காற்று வீசினாலும், மழைக்காலங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: அரசு மேல்நிலைப்பள்ளி பிரதான நுழைவு வாயில் முன்புறம் மரக்கிளையை அழுத்திய நிலையில் உயரழுத்த மின் கம்பி செல்கிறது. இதுகுறித்து ஆறு மாதங்களுக்கும் மேலாக ரெகுநாதபுரம் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மின்வாரிய அதிகாரிகள் பராமரிப்பு பணியின் போது பார்க்கிறோம் எனக் கூறுகின்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இன்றி உள்ளது. எனவே மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் நலன் கருதி ஆபத்தான மின் கம்பிகள் பதிந்துள்ள மரக்கிளையை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.---