விசைப்படகுகளில் கரையோரம் மீன்பிடித்தால் நடவடிக்கை
தொண்டி: விசைப்படகு மீனவர்கள் கரையோரங்களில் மீன் பிடித்தால் படகு பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மரைன் போலீசார் எச்சரித்துள்ளனர். தொண்டி மரைன் போலீசார் கூறியதாவது: விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கடற்கரையிலிருந்து 5 நாட்டிகல் துாரத்திற்குள் மீன்பிடிக்கக் கூடாது. அதையும் மீறி சில விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து கரையோரம் மீன் பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் மீன்பிடி வலைகளும் சேதமடைகின்றன. மேலும் இரு மீனவர்களிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து விசைப்படகு மீனவர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும் சில மீனவர்கள் இச்செயலில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இனி வரும் நாட்களில் கரையோரங்களில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்தால் படகை பறிமுதல் செய்வதோடு, அரசின் நலத்திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது மீன் இனபெருக்கத்தை தடுக்கும் என்பதால் இந்த வலைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்த கூடாது என்றனர்.