அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா முன்னிலை வகித்தனர். பெண்களை இழிவாக பேசியுள்ள அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும். தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பிரச்னையால் மக்கள் சிரமப்படுகின்றனர். நிரந்தர தீர்வு காணப்படவில்லை. நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் அமைச்சர் பொன்முடி உருவ படத்தை செருப்பால் அ.தி.மு.க.,வினர் அடித்தனர்.எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் மலேசியா பாண்டியன், ராமநாதபுரம் தொகுதி இணைச் செயலாளர் தஞ்சி சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.