படகில் சீன இன்ஜின்: கண்டித்து நாளை ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விசைப்படகுகளில் சீன இன்ஜின்கள் பொருத்துவதைக் கண்டித்து நாளை(அக்.25) மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் சேசு தலைமையில் நடந்தது. இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு மூழ்கி சேதமடைந்த படகிற்கு தமிழக அரசு ரூ.6 லட்சம் வழங்குகிறது. இதே போல் இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலைக் கொண்டு மோதி மூழ்கடித்த படகு, இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் படகு, இலங்கை நீதிமன்றம் விடுவித்து மீட்க முடியாத படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.ராமேஸ்வரத்தில் உள்ள 650 விசைப்படகுகளில் 450 படகுகளில் 193 குதிரை திறன் கொண்ட இன்ஜினும், 200 படகுகளில் 120 குதிரைத் திறன் பொருத்திய இன்ஜின் பொருத்தப்பட்டு மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். ஆனால் 4 படகுகளில் மட்டும் விதிகளை மீறி 280 குதிரைத் திறன் கொண்ட சீன இன்ஜினை பொருத்தியுள்ளனர்.குறுகிய கடல் பரப்பு கொண்ட இப்பகுதியில் இந்த இன்ஜின் மூலம் மீன் பிடிப்பதால் மீன்வளம் அழிவதுடன், இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படும். எனவே வரம்பு மீறி பயன்படுத்தப்படும் சீன இன்ஜினை அகற்ற வேண்டும்.இதனை வலியுறுத்தி நாளை ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தீர்மானத்தில் தெரிவித்தனர். மீனவர் சங்க தலைவர்கள் சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.