போதைப்பொருள் திருடிய இலங்கை போலீஸ்காரர் வழக்கில் விசாரணை ஏப்.22 க்கு நீதிமன்றம் தள்ளிவைப்பு
ராமநாதபுரம்:-இலங்கையில் போதைப்பொருட்களை திருடி தலைமறைவாகி தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவுக்கு 32, எதிரான வழக்கில் இரு சாட்சிகளிடம் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. பிறகு வழக்கு ஏப்., 22க்கு தள்ளி வைக்கப்பட்டது.இலங்கை கொழும்பு புறநகர் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் இருந்து 2020 ஆக., 26- இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலின்படி அனுர குமார என்பவரை போலீசார் பிடித்தனர். இவர் இலங்கை துறைமுகம் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் அண்ணன் ஆவார். பிரதீப் குமார் பண்டாரா தான் இலங்கை துறைமுக ஸ்டேஷனில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருட்களை பணி நேரத்தில் திருடி சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.இதனால் பிரதீப் குமார் பண்டாராவையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இதையறிந்தவர் பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார். 2020 செப்., 4 ல் மண்டபம் கடலோர போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. பூந்தமல்லி சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார்.இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இலங்கை போலீஸ்காரர் நேரில் ஆஜரானார். மண்டபம் மரைன் எஸ்.ஐ., யாசர் மவுலானா, ராமேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரி ஆகியோர் சாட்சியமளித்தனர். பின் வழக்கை நீதிபதி மெகபூப் அலிகான் ஏப்.,22க்கு தள்ளி வைத்தார்.