நதி பாலத்தில் தடுப்பு கம்பிகள் சேதம்
தேவிபட்டினம்: பனைக்குளம் அருகே நதிப் பாலத்தில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடத்தில் இருந்து சித்தார்கோட்டை, அம்மாரி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் வழியாக ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் நதிப்பாலம் அமைந்துஉள்ளது. வைகை ஆற்றின் உபரி நீர் கடலில் கலக்கும் பகுதியான ஆற்றங்கரை ஆற்றின் மேல் இந்த நதிப்பாலம் அமைந்துள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தால் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக சேதம் அடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பாலத்தை கடக்கும் நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த கம்பியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.