பாம்பன் பாலம் நுழைவில் முள் மரங்களால் ஆபத்து
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நுழைவில் காட்டுகருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால், பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.பாம்பன் கடலில் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர்.மேலும் இப்பாலத்தில் நின்றபடி மன்னார் வளைகுடா கடல் அழகு, தீவுகள் மற்றும் புதிய, பழைய ரயில் பாலத்தை கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில் பாலத்தின் இரு நுழைவு பக்கவாட்டிலும் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனுள் விஷ வண்டுகள், பாம்புகள் புகலிடமாக உள்ளதால், அடிக்கடி பாலத்தின் சாலையை கடந்து செல்கிறது.இதனால் பாலத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் பீதி அடைகின்றனர். மேலும் முள் மரங்களில் வேர்கள் பாலத்தின் பக்கவாட்டில் விரிசல் ஏற்படுத்தி விபரீதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆகையால் மரங்களை அகற்றிட தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.