ஏர்வாடியில் அகற்றப்படாத ஆபத்தான நீர்த் தேக்க தொட்டி
கீழக்கரை; ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சைமூப்பன் வலசை அருகே உள்ள மொட்டை கிழவன் வலசை கிராமத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் நீர்த் தேக்க தொட்டி உள்ளது.இதனருகே முத்து மாரியம்மன் கோயில் உள்ளதால் பக்தர்களும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர் மொட்டைக்கிழவன் வலசை கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பத்தடி உயரம் கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. நாளடைவில் பயன்பாடில்லாததால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் வரத்தின்றி காட்சி பொருளாக உள்ளது. இந்நிலையில் தண்ணீர் ஏற்றமின்றி தொட்டியின் ஒரு பகுதி சேதமடைந்து கான்கிரீட் சிமென்ட் பூச்சுக்கள் வெளியே தெரிகிறது.இதன் அருகே முத்து மாரியம்மன் கோயில் உள்ளதால் ஏராளமான பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் இதன் அருகிலே செல்கின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பயன்படாத குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.