உத்தரகோசமங்கையில் புராணங்களின் தொகுப்பு பலகைகளில் எழுதி வைப்பு; பக்தர்கள் வரவேற்பு
உத்தரகோசமங்கை: பழமையும் புராதான சிறப்பும் பெற்ற சிவாலயமான உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் புராணங்களின் தொகுப்பு பலகைகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஏப்., 4ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பிறகு அதிக அளவு விடுமுறை நாட்களில் பக்தர்கள் உத்தரகோசமங்கைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். கோயிலின் நுழைவுப் பகுதியில் உத்தரகோச மங்கையின் சிறப்பு மற்றும் தல வரலாறு பெருமைகளை அனை வரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதி வைத்து காட்சிப் படுத்தி உள்ளனர். அதேபோன்று இலந்தை மரம் அருகே மாணிக்க வாசகப் பெருமானின் வரலாறு மற்றும் அவர் பாடிய பாடல்கள் இடம் பெற்ற ஸ்தலங்கள் குறித்து விரிவாக ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் எழுதி வைத்துள்ளனர். கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரக்கூடிய பக்தர்கள் நிதானமாக கோயிலின் தல வரலாறு மற்றும் மாணிக்க வாசகரின் வரலாறு உள்ளிட்டவைகளை ஆர்வமுடன் அறிந்து கொள்கின்றனர்.