| ADDED : செப் 07, 2026 10:04 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயில் கும்பாபிேஷக விழாவில் போதுமான பார்க்கிங், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளின்றி பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தேவிபட்டினம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருவயல் ரெணபலி முருகன் கோயில் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை முதல் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் குவிந்தனர். பக்தர்களின் வருகைக்கு ஏற்ப போதுமான கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து தரவில்லை. குறிப்பாக பார்க்கிங் வசதி குளறுபடியால் கண்டபடி ரோட்டில் நிறுத்தப்பட்ட கார், டூவீலர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழா முடிந்து வெளியே வாகனத்தில் வருவதற்கு மட்டும் 2 மணி நேரம் வரை ஆனதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். பக்தர்களிடம் ரூ.பல லட்சம் நன்கொடையாக வசூலிக்கும் ராமநாதபுரம் சமஸ்தானத்தினர், இது போன்ற பெரிய விழாவின் போது இனிவரும் காலங்களில் கூடுதலாக குடிநீர், கழிப்பறை மற்றும் பார்க்கிங் வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.––