தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி தேவை
கீழக்கரை : கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பல மாதங்களாக குடிநீர் தொட்டி இருந்தும் அவற்றில் குடிநீர் வசதி செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கீழக்கரை, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ஏர்வாடி உள்ளிட்ட 28 வருவாய் கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அலுவலக வேலை நாட்களில் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தன்னார்வலர்களின் முயற்சியால் நிறுவப்பட்ட குடிநீர் தொட்டியில் பல மாதங்களாக தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. கீழக்கரையைச் சேர்ந்த தன்னார்வலர் அபூபக்கர் சித்திக் கூறியதாவது: கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பயனாளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அவசரத்திற்கு ஒதுங்கக்கூடிய கழிப்பறைகளில் தண்ணீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளதால் தண்ணீர் வரத்தின்றி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. காஞ்சிரங்குடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். எனவே பராமரிப்புக்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.