உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பலன் தரும் நிலையில் உள்ள பனை மரங்களை வெட்டி அழிக்கும் போக்கு தடுத்து நிறுத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

பலன் தரும் நிலையில் உள்ள பனை மரங்களை வெட்டி அழிக்கும் போக்கு தடுத்து நிறுத்த இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட சல்லி தோப்பு கடற்கரையோரப் பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி அழிக்கும் போக்கு தொடர்ந்தது. இதனை அறிந்த அப்பகுதி இயற்கை ஆய்வாளர்கள் தடுத்து நிறுத்தி கீழக்கரை வருவாய்த்துறையினருக்கு தெரிவித்தனர். திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களில் கடற்கரையோர பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. பனை மரங்களை நம்பி ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளனர். இந்நிலையில் தனி நபர்களின் பட்டா இடங்களில் வளர்ந்திருக்கும் பனை மரங்களை ரியல் எஸ்டேட்களுக்காக வேருடன் வெட்டி அகற்றும் போக்கு தொடர்கிறது. இது குறித்த உரிய விழிப்புணர்வை வருவாய்த் துறையினர் வழங்கிடாமல் மெத்தனப் போக்கில் உள்ளனர். பனை மரங்களை வெட்டி துண்டுகளாக செங்கல் சூளைகளுக்கு அனுப்பும் நிலை உள்ளது. இயற்கை ஆர்வலர் தமிழ்வேந்தன் கூறியதாவது: களிமண் குண்டு அருகே சல்லித்தோப்பு கிராமப்பகுதியில் தனியார் இடத்தில் 15க்கும் அதிகமான பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டது. இது குறித்து நான் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். பனை மரத்தை வெட்டி அழிப்பதால் நாளடைவில் பனை மரம் அரிதாகி போய் விடும். இதை நம்பி உள்ள ஏராளமானோர் பொருளாதார ரீதியாக நீண்ட பாதிப்பை சந்திப்பார்கள். பனை மரத்தின் மூலம் கருப்பட்டி, பனை ஓலை கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பனை சார்ந்த பொருட்களுக்கு உற்பத்தி தரும் இடமாக இப்பகுதி விளங்குகிறது. நல்ல பலன் தரும் நிலையில் உள்ள பனை மரங்களை வெட்டி அழிப்பதை தடுக்க வேண்டும். இதற்காக அரசு உரிய நடைமுறை சட்டத்தை இயற்றியுள்ளது. இவ்விஷயத்தில் தலையாரி, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., அடங்கிய குழுக்களை ஏற்படுத்தி பனைமரங்களின் பேரழிவை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ