தேங்கியுள்ள நீரால் நோய் தொற்று அச்சம்: அகற்ற மக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக அகற்றிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தது. அதன்பிறகு வெயில் அடித்தது, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதுபோன்று சக்கரகோட்டை மின்வாரியம் அலுவலக ரோட்டில் 2 நாட்களாக குளம்போன ரோட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளது என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே மழைக்காலத்தில் நகர், புறநகர் பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடன் அகற்றி தண்ணீரை ஊருணிகளுக்கு கொண்டுசெல்வதற்கு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.