உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மீனவர்கள் மறியல்

பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மீனவர்கள் மறியல்

ராமேஸ்வரம் ; இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கவும், மீனவர்களை விடுவிக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்தும், கச்சத்தீவு அருகே மீன்பிடி உரிமை பெற்றுத்தர வலியுறுத்தியும், நேற்று காலை, 9:30க்கு பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மீனவர்கள், மீனவ பெண்கள் குவிந்தனர். போலீசாரின் தடுப்பு வேலியை தாண்டி பாம்பன் பாலத்திற்குள் செல்ல அவர்கள் முயன்றனர். இதனால் போலீசார் - மீனவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், தடையை தாண்டி, பாலத்தின் நுழைவு பகுதியில் அமர்ந்து, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். எஸ்.பி., சந்தீஷ் மீனவர்களிடம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். மறியலால் இரண்டு மணி நேரம் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணியரின் வாகனங்கள், அரசு பஸ்கள் பாம்பன் பாலத்தின் இருபுறமும் நீண்ட துாரம் நிறுத்தப்பட்டன.இலங்கைச் சிறையில் 100 நாட்களுக்கும் மேல் உள்ள பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் குடும்ப பெண்கள் சிலர், பாலத்தில் இருந்து கீழே கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை பெண் போலீசார் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.

இலங்கையில் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், ஜெதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, 15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடந்த அக்., 28ம் தேதி சிறைபிடிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வழக்கு, இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, 15 மீனவர்களில் 11 பேர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், நான்கு மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை