உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம்! காடு வளர்ப்பு திட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் ஏற்பாடு

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம்! காடு வளர்ப்பு திட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் ஏற்பாடு

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் மத்திய அரசின் வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. பிரதமரின் ராஷ்ட்ரீய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டம் மற்றும் வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் பசுமையை ஏற்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை பெருக்கவும் குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணை மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தேக்கு, மகோகனி, வேங்கை, சவுக்கு மற்றும் ஈட்டி மரம் போன்ற 5 வகையான மரக்கன்றுகள் வழங்கப்படும். இதில் விவசாய நிலங்கள், பண்ணைக்குட்டைகளின் எல்லைகளில் நடுவதற்கு எக்டேருக்கு 160 மரக்கன்றுகளும், குறைந்த அடர்த்தி நடவுகளுக்கு எக்டேருக்கு 500 மரக்கன்றுகள் நுாறு சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் கூறுகையில், வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 எக்டேருக்கு இலவசமாக மரக்கன்றுகள் பெறலாம். தோட்டக்கலை பண்ணையில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி