உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழச்செல்வனுாரில் தரமற்ற உலர் களத்தால் அரசு நிதி வீணடிப்பு

கீழச்செல்வனுாரில் தரமற்ற உலர் களத்தால் அரசு நிதி வீணடிப்பு

சாயல்குடி : சாயல்குடி அருகே கீழச்செல்வனுார் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட உலர் களம் சேதமடைந்ததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. சாயல்குடி அருகே கீழச்செல்வனுாரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு திட்டத்தில் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் உலர் களம் அமைக்கப் பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் வைக்கோல் உள்ளிட்ட தானியங்கள் குவிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட உலர்களம் அமைக்கும் திட்டம். நெல் மற்றும் சிறு குறு தானியங்கள் உலர வைப்பதற்காக கடலாடி யூனியனில் ஏராளமான இடங்களில் உலர்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட உலர்களத்தின் நடுப்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: கடலாடி யூனியனில் இதுபோன்ற உலர் களங்களை அமைக்கின்றனர். அவற்றை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். உலர்களம் அருகே சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் அவற்றை அகற்றி அப்பகுதியை துாய்மையாக மாற்ற வேண்டும். எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க உரிய முறையில் அவற்றை மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !