ராமநாதபுரத்தில் பராமரிப்பின்றி இயங்கும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படாததால் இரண்டு ஆண்டில் கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக் குறியாகும் நிலை உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 5 தளங்கள் கொண்ட பல்நோக்கு சிகிச்சை மையம் ரூ.154.84 கோடியில் கட்டப்பட்டது. இந்த கட்டடம் 2023 ஆக.,25ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. புதிய கட்டடம் கட்டி 2 ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில் முறையான பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடத்தின் முன்பக்க சுவர் பளிச்சென இருந்தாலும், பின்பக்க சுவர் முழுவதும் அரித்து சேதமடைந்துள்ளது. புதிய கட்டடத்தின் சுவற்றில் தொடர்ந்து தண்ணீர் கசிவதால் குழாய்கள் துருபிடித்துள்ளது. இதனால் கட்டடத்தின் ஸ்திர தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மகப்பேறு பிரிவின் பின்பக்கம் எவ்வித பராமரிப்பின்றி ஓணான், தவளைகளின் வாழ்விடமாக காணப்படுகிறது. மருத்துவமனை கட்டடம் பராமரிப்பில் நிர்வாகம் போதிய கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.