எமனேஸ்வரத்தில் வீடு, தறி மேடை சேதம்
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் நெசவாளர் கோவிந்தன். அப்பகுதியில் உள்ள கிருஷ்ணா கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் தறி மேடை அமைத்து நெசவு நெய்து வருகிறார்.3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இவரது ஓட்டு வீட்டின் மண் சுவர் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இடிந்தது. வீட்டில் கோவிந்தனின் பெற்றோர் துாங்கிய நிலையில் சுவர் இடியும் சத்தம் கேட்டு உடனடியாக எழுந்து வெளியில் சென்றனர்.மேலும் அருகில் இருந்த கோவிந்தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வெளியில் சென்றதால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது. இதில் தறிமேடை சேதமடைந்தது. நுால் மற்றும் வீட்டின் சுவர் இடிந்த நிலையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.வருவாய்த்துறை மற்றும் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.