விதைப்பு செய்த விதை நெல்லுக்கு ஆழ்துளை கிணற்று நீர் பாய்ச்சல்
ஆர்.எஸ்.மங்கலம் : செங்குடி பகுதியில் நெல் விதை முளைப்புக்கு ஏற்ற பருவமழை இல்லாததால் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது. பருவ மழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் பருவமழை ஏமாற்றத்தால் பெரும்பாலான பகுதிகளில் முளைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் இன்றி நெல் விதைகள் முளைப்புத்திறன் இழந்தன. இதனால் சில பகுதிகளில் விவசாயிகள் மீண்டும் வயல்களில் நெல் விதைப்பு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் செங்குடி, வரவணி, எட்டிய திடல், முத்துப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விதைப்பு செய்த வயல்களில் உள்ள நெல் விதைகள் முளைப்பதற்கு அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை டீசல் மோட்டார் பயன்படுத்தி வயலுக்கு பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5000 வரை கூடுதல் செலவு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.