உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் டேங்கர் லாரி குடிநீர்  தரமாக உள்ளதா..ஆய்வு செய்யுங்கள்;  தேவை அதிகரிப்பால் குடம் ரூ.13க்கு விற்பனை ஜோர்

ராமநாதபுரத்தில் டேங்கர் லாரி குடிநீர்  தரமாக உள்ளதா..ஆய்வு செய்யுங்கள்;  தேவை அதிகரிப்பால் குடம் ரூ.13க்கு விற்பனை ஜோர்

ராமநாதபுரம்: கோடை காலம் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர், கிராமப்புறங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. சிலர் டேங்கர் லாரியை சரிவர சுத்தம் செய்யாமல் பாதுகாப்பற்ற முறையில் குடிநீரை விற்பதாக புகார் எழுந்துள்ளது. அதை குடிக்கும் மக்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொது சுகாதாரத்துறையினர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் தனியார் லாரிகளில் ஆய்வு செய்து சுத்தமான குடிநீர் விற்பனையை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் நகர், கிராமப்புறங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாயில் வினியோகம் செய்கின்றனர். இந்த குடிநீர் சில நாட்கள் மட்டும் வருவதால் நகர், கிராமப்புறங்களில் தனியார் லாரிகளில் கொண்டுவரப்படும் குடிநீர் மற்றும் கேன்களை வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் லாரிகளில் குடிநீர் விற்பனை ஜோராக நடக்கிறது. சாதாரண குடிநீர் குடம் ரூ.7 க்கும், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் குடம் ரூ.13க்கும் விற்கப்படுகிறது. மாவட்டத்தில் முறைப்படி அரசு அனுமதியுடன் 12 குடிநீர் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றை தவிர்த்து சிலர் அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் சிலர் பாதுகாப்பாற்ற குடிநீரை விற்பனை செய்கின்றனர். இதனால் நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே ஐ.எஸ்.ஐ., முத்திரை ஓட்டிய தரமான குடிநீர் கேன், பாட்டில்கள் விற்பனையை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறையினர், பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் தனியார் லாரிகளில் குடிநீரில் குளோரின் கலப்பு, துாய்மையை ஆய்வு செய்து சுத்தமான குடிநீர் விற்பனையை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. லாரியில் கொண்டுவரும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி