கோட்டைமேடு இணைப்பு: மக்கள் உண்ணாவிரதம்
கமுதி; கமுதி பேரூராட்சியுடன் கோட்டைமேடு பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டைமேடு மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் ஊராட்சியில் கோட்டைமேடு பகுதி இருந்து வந்தது. இந்நிலையில் கோட்டைமேட்டை சேர்ந்த 4 வார்டுகளை கமுதி பேரூராட்சியுடன் இணைப்பதாக அரசாணை வெளியிடப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டைமேடு கிராம மக்கள் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கமுதி பேரூராட்சியுடன் இணைப்பதை எதிர்க்கும் வகையில் கோட்டைமேடு கிராம மக்கள் கமுதி ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.அப்பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி கூறுகையில், நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்தோம். தற்போது பேரூராட்சியில் இணைப்பதாக அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதனால் வீட்டு வரி, 100 நாள் வேலை உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோட்டைமேடு பகுதியை பேரூராட்சியுடன் இணைப்பதை நீக்கி ஊராட்சியாக மீண்டும்அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.