ஜனநாயகத்தை காக்க உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்த வேண்டும்: ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநில தலைவர் பேட்டி
ராமநாதபுரம்; ''தமிழக அரசு ஜனநாயகத்தை காக்க ஊரக, உள்ளாட்சி தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் இச்சங்க மாநில மாநாட்டுக்கான வரவேற்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் ரமேஷ் கூறியதாவது: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்ககைளை வைத்து வருகிறோம். இன்று வரை தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலை தொடருமானால் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் காலம் நிறைவு பெற்றதால் உடன் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த வேண்டும்.அரசு தேர்தல் நடத்த முடியாத நிலை இருப்பதாகவும், அதற்கு ஊராட்சி அமைப்புகளை மறு வரையறை செய்வதற்காக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இது அதிகாரிகளால் ஒரு அறைக்குள் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயமில்லை. ஊராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு 125 ஆண்டுகளும், ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு 65 ஆண்டுகளும் ஆகிறது. ஊராட்சி மறுவரையறை செய்ய தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மக்கள், அரசியல் கட்சிகள், அலுவலர்கள் உள்ளிட்ட கருத்துக்கள் கேட்கப்பட்டு மறு வரையறை செய்ய வேண்டும்.கனவு இல்லம் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் என இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால் பணிகள் செய்வதற்குரிய தனி கட்டமைப்புகளை இது வரை மாநில அரசு ஏற்படுத்தவில்லை. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றி தருகிறேன் என உறுதியளிக்கப்பட்ட விஷயங்களுக்கும் அரசாணை பிறப்பிக்கவில்லை. தற்போதுள்ள தமிழக அரசு பதவி காலம் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் அலுவலர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.