அலைபேசிகளின் இணைப்பு அடிக்கடி கட்: மக்கள் அவதி
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் சமீப நாட்களாக அலைபேசியில் பேசும் போதே 'கட்' ஆவதால் தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். திருவாடானை, தொண்டி பகுதியில் சமீப காலமாக அலைபேசி வாயிலாக யாரிடமும் முழுமையாக பேச முடியவில்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே சிக்னல் சரிவர கிடைக்காமல் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ, வோடா போன் என அனைத்து நிறுவனங்கள் இணைப்புகளுக்கும் இப்பிரச்னை உள்ளது. மக்கள் கூறுகையில், எண்ணை பதிவு செய்தவுடன் அடுத்த முனையில் உள்ள அலைபேசிக்கு 'ரிங்' போவது கேட்பது இல்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே 'கட்' ஆகிறது. இதனால் அவசர தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதியாக உள்ளது. சில நாட்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக முழுமையாக தொடர்பு துண்டிக்கப்படுகிறது. அனைத்து அலைபேசி நிறுவனங்களும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.